திங்கள், 14 டிசம்பர், 2015

10 நொடி கதை 5 - நேர்முக தேர்வு


ரமேஷ் பதற்றத்துடன் காத்திருந்தான். அருகிலிருந்த பட்டதாரி ஒருவன் அவனிடம் பல விஷயங்களை கேட்டு நச்சரித்து கொண்டிருந்தான். நேர்முக தேர்வு அறைக்குள் நுழைந்தவனுக்கு அதிர்ச்சி. "நீங்கள் தேர்வாகிவிட்டீர்கள். மற்ற விவரங்கள் பேசுவோமா?" அவனுடன் பேசிய பட்டதாரி எதிரே நின்று கொண்டிருந்தார்.

--சிவசுப்பிரமணியன்

சனி, 12 டிசம்பர், 2015

10 நொடி கதை 4 - அக்கறை


“அலாரம் அடிச்சது கூட தெரியாம அப்படி என்ன தூக்கம் வேண்டி கிடக்கு. சீக்கிரம் கிளம்பி ஸ்கூலுக்கு போடா!” 50 வயதை தாண்டிய பள்ளி முதல்வரை அக்கறையோடு எழுப்புகிற 70 வயது தாய்.

--சிவசுப்பிரமணியன்

வெள்ளி, 11 டிசம்பர், 2015

10 நொடி கதை 3 - பாசம்


பாட்டியை  பார்த்தவுடன்  அழுகையை  நிறுத்தி புன்னகை  பூத்தது மடிக்கணினியின் ஒளித்திரையில் மழலை முகம்.

--சிவசுப்பிரமணியன்

செவ்வாய், 8 டிசம்பர், 2015

10 நொடி கதை 2 - தரிசனம்

“இன்னைக்குள்ள கடவுள பார்த்திருலாமா?” வரிசையின் கடைசியில் நின்ன பக்தன் ஒருவன் கேட்டான். “உடல் முடியாம கூலி வேலை செய்யும் உன்னை பெற்ற தாயை முதலில் பார்.” என்றது ஒரு குரல். திரும்பி பார்த்தால் யாரும் இல்லை.

--சிவசுப்பிரமணியன்

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

10 நொடி கதை 1 - பசி

அடுக்கு மாடி வீட்டின் உப்பரிகையிலிருந்து பனிக்கூழ் சுவைக்கும் பாப்பா வேடிக்கை பார்த்துகொண்டிருந்தது குடிசை திண்ணையில் தாய்ப்பாலுக்காக அழுதுகொண்டிருக்கும் பாப்பாவை !


-- சிவசுப்பிரமணியன்.

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

கவிதை 46 - இயற்க்கை பாசம்

தந்தை சிங்கத்தின் தாடி பிடித்து,
சுட்டியாக விளையாடும் சிங்கக்குட்டிகள் !
தாய் யானையின் தும்பிக்கையை பிடித்து, 
குட்டி நடை போடும் யானைக்குட்டிகள் !

தாய் புலியின் நாவு வருடலை அன்போடு,
ஏற்றுக்கொள்ளும் புலிக்குட்டி !
தனது நெற்றியை தாய் நெற்றியோடு அழகாக,
ஒட்டிக்கொள்ளும் குட்டி ஒட்டகச்சிவங்கி !


அன்னை சிறுத்தையின் அரவணைப்போடு,
குறும்புகள் பல செய்யும் சிறுத்தைக்குட்டிகள் !
தாய் கங்காரு மடியிலிருந்து ஆர்வத்தோடு,
வெளியே எட்டிப்பார்க்கும் கங்காருக்குட்டிகள் !

தாயின் சமிக்ஞை அறிந்து சுறுசுறுப்போடு,
வேகமாக தாய்ப்பால் அருந்தும் புள்ளிமான் குட்டிகள் !
தாயின் பிடியிலிருந்து கீழே விழாமல் இருக்க,
இறுக்கமாக பிடித்து தொங்கும் குரங்குக்குட்டிகள் !

இரையை சமமாக பிரித்து பிஞ்சு வாய்க்குள் 
அக்கறையோடு உணவூட்டும் சிட்டுக்குருவிகள் !
கூட்டு குடும்பமாக வானில் சிறகை விரித்து,
சுதந்திரமாக பறக்கும் எத்தனையோ பறவைகள் !

விலங்குகள் வேட்டையாடும் காட்டுக்குள்,
கொட்டிக்கிடப்பது இயற்க்கை பாசமும் தான் ....

--சிவசுப்பிரமணியன் 

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

கட்டுரை -5 - மறந்து போன இந்திய மாயாஜால கற்பனை கதைகள்

ஆங்கிலத்தில் Tamil Fantasy Novels or Stories என்று கூகுளில் தேடி பார்த்த பொழுது விளக்கமான முடிவுகள் ஒன்றும் தென் படவில்லை. Fantasy  என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழாக்கம் கூட கற்பனை, மாயாஜாலம், மந்திர லோகம் என்று தான் என்னால் நினைத்து பார்க்க முடிகிறது.

ஆங்கில கதைகளோ, நாவல்களோ எடுத்துக்கொண்டால் கற்பனைக்கு எட்டாத அறிவியல் புனைக்கதைகள் (Science Fiction), வரலாற்று புனைக்கதைகள் (Historical Fiction) மற்றும் மாயாஜால சாகச பயணக்கதைகள் (Fantasy Adventure) என்று ஏராளமான வகைகளில் புத்தகங்கள், நாவல்கள், தொலைக்காட்சி தொடர்கள், நாடகங்கள், திரைப்படங்கள் என்று அனைத்தும் பிரம்மாண்ட வரவேற்ப்பை பெற்றுள்ளன.

ஆனால் தமிழிலோ, அல்லது இந்திய மொழிகளிலோ முன்பொரு காலத்தில் இந்த வகையறாக்கள் இருந்த போதிலும் தற்பொழுது அவை எல்லாம்  நினைவுகளாகவோ அல்லது சிறுவர் கதைகளாகவோ தான் கருதபடுகின்றன. திரைப்படங்கள் கூட அவ்வபோது பாஹுபலி, மகதீரா, ஈ, எந்திரன், புலி, இம்சை அரசன் 23ம் புலிகேசி என்று வந்த வண்ணம் உள்ளன.


சரி- விஷயத்துக்கு வருவோம். கருப்பு வெள்ளை காலத்தில் இந்தியாவில் ஏராளமான நாவல்கள், கதைகள், திரைப்படங்கள் கற்பனை காவியங்களாக வெளியாகி இருந்தன. பழம் பெரும் மாயாஜால கதைகள் என்றால் சமஸ்க்ரிதத்தில் வெளியாகி பின்னர் பிராந்திய மொழிகளில் புகழ் பெற்ற  விக்கிரமாதித்யன்-வேதாளம் கதைகள் தான் என் நினைவுக்கு வருகிறது. 17ம்  நூற்றாண்டில் வெளியான மதனகாமராஜ கதைகளும் இதே வகை தான். இந்த கதைகள் 1930-50 காலக்கட்டத்தில் நாடகங்களாகவும், திரைப்படங்களாகவும் வெளி வந்துள்ளன. மதனகாமராஜ கதைகள் Arabian Nights என்ற அரேபிய கதைகள் போல பல கதைகளின் சேகரிப்பு. அம்புலி மாமா, சிறுவர் மலர், பஞ்சதந்திர கதைகள், அக்பர்-பீர்பால் கதைகள், தெனாலிராமன் கதைகள், Jataka Tales, என்று பல சிறு கதைகளும், தொடர்களும், வார இதழ்களில், நூலகங்களில் படித்த நினைவு.

இந்த மாயாஜால கதைகள் சில நேரம் நமது மூளைக்கு வேலை கொடுக்கும். Lord of the Rings கதையில் வரும் Gollum போடும் புதிர்கள் போல் மன்னன் விக்கிரமாதித்யனுக்கு வேதாளம் புதிர் கதைகளாக அடுக்கி தள்ளும். மாபெரும் காவியங்களான மஹாபாரதம், இராமாயணம் நமது கற்பனைக்கு சிறகு கொடுத்து பறக்க செய்யும்.

தற்போதைய தலைமுறை எழுத்தாளர்கள் இந்த மறந்து போன கற்பனை புனைக்கதைகளை படைப்புகளாக செதுக்கினால் அது நன்றாக இருக்கும். ரசிக்க தோன்றும், காட்சிகள் கண் முன்னே மெய்நிகர் வடிவமாக தோன்றும், கற்பனைகள் புதுமையாக தோன்றும், நுண்ணுட்பத் தொழில்நுட்பம் தாளம் போடும், செயற்கை நுண்ணறிவுள்ள எந்திர அரிமாக்கள் ஆட்டம் ஆடும், மந்திரக்குருவிகள் பாட்டு பாடும், எண்ணங்கள் வேற்று கிரக பூக்களாக மலரும். 

Fairy Tales, Dragons, Vampires, Werewolves என்று எத்தனையோ விஷயங்கள் இன்னும் அலசி பார்க்கலாம் எனது அடுத்த கட்டுரையில்!!!

--சிவசுப்பிரமணியன்.

சனி, 31 ஜனவரி, 2015

ஹைக்கூ 5 - புகழ் பாட்டு


என்னை புகழ்ந்து பாட வேண்டாம் என்று கோபப்பட்டு கொண்டு இருளுக்குள் மறைந்து கொண்டான் மதிமயக்கும் பௌர்ணமி சந்திரன் ***

--சிவசுப்பிரமணியன்

ஹைக்கூ 4 - புகைப்படம்



என்னை புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று வெட்கப்பட்டு மேகத்துக்குள் ஒளிந்து கொண்டான் உதயமாகும் அதிகாலை சூரியன் .....

--சிவசுப்பிரமணியன்

சனி, 27 டிசம்பர், 2014

கட்டுரை 4 - மனித மொழிகளின் கலப்படம்

                                   யற்கையான மனித மொழிகளின் பரிணாமம் பற்றி என்னுடைய முந்தைய கட்டுரையில் பார்த்தோம். ஆங்கிலம் - தினசரி வாழ்க்கையில் பேசப்படும் ஒரு பொதுவான சர்வதேச மொழியாகும். வேகமான தகவல்தொடர்பு வளர்ச்சிக்கு மத்தியில் ஒரு பொதுவான மொழி அத்தியாவசிய தேவையாக மாறி வருகிறது. தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கும் ஒரு நுண்ணறி பேசி போல்,  ஒரு பொதுவான மொழி இந்த கிரகத்தில் உள்ள ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனுக்கும் போய் சேருவதில்லை. காரணங்கள் பல இருக்கலாம் - ஆனால் நான் முக்கிய காரணிகளாக கருதுவது கல்வியறிவின்மை மற்றும் வறுமை.

                                  அறிவியல் பார்வையில்  மனித மொழி ஒரே மொழி என்று கருதப்படுகிறது. அது மனிதர்களைத் தவிர விலங்குகள் அல்லது பறவைகள் அல்லது பிற வாழும் உயிரினங்களில் இருந்து வேறுபடுகிறது. சொல்லகராதி, உச்சரிப்பு, பேச்சு நடை, வட்டார மொழிகள் போன்ற பல காரணிகள் உலகில் பேசப்படும் மனித மொழிகளில் முடிவில்லா மாறுபாடும் பரந்த வகைப்பாடும் ஏற்படுத்தியிருக்கின்றது.
                                தற்போது மொழிக்கலப்படம் அதிகரித்து வருவதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.இந்த கலப்படம் அசல் மொழி + பிராந்திய மொழி + சர்வதேச மொழி + புரியாத  புதிய சொற்களை கலந்து ஒரு புது மொழியை உருவாக்கி வருகிறது. சிலர் இதை மொழி பரிணாம வளர்ச்சி என்று வாதிடலாம். சிலர் அருகிவரும் மொழிகள் அதன் தனித்தன்மையை இழந்து விடுகிறது என்று வாதிடலாம். என்னை கேட்டால் நாடோடிகள் போல் வெவ்வேறு இடங்களுக்கு சுற்றி திரியும் நாம், நமக்கு தெரிந்த மொழியை மறக்கும் வாய்ப்பை அதிகரித்து விடுகிறோம். மொழி கலப்படத்திற்கு வழி வகுக்கிறோம். இந்த விவாதத்தை மொழியியல் அறிஞர்கள் அல்லது ஆராய்ச்சியாளர்களிடமே விட்டு விடுவோம்.

                                  எனது பார்வையில், நாம் குறைந்தது நம் சொந்த தாய் மொழிகளின் சொல்லகராதி அறிய முயற்சி செய்து அதை மென்மேலும் வளர்க்க, எழுத, பேச என்று முறையாக பயன் படுத்தலாம். ஆராய்ச்சி ஒன்று சொந்த தாய் மொழி பேச தெரியாத அல்லது பேசுவதை மறந்த ஒரு நிலையும் ஏற்படுகிறது என்று எடுதுக்காட்டுகின்றது. தாய்நாட்டை விட்டு செல்லும் ஒவ்வொரு குடிமகனும் தனது தாய் மொழி தெரிந்த இன்னொருவரிடம் அதே மொழியில் பெரும்பாலும் பேசுவதில்லை.

                                   நாம் கற்று புலமை பெற்ற சொந்த முதல் மொழியில் சரளமாக பேசும் பொழுது பிற மொழிகளை அதில் கலக்காமல் நாம் ஏன் பேச முடியாது.   பிராந்திய மொழிகளில் தான்  சர்வதேச மொழியான ஆங்கிலம் கலக்கும் வாய்ப்பு அதிகம் என்று யூகிக்கிறேன். சரளமாக ஆங்கிலம் பேசும் ஒரு நபர் தனது  சொந்த மொழியிலிருக்கும் ஓரிரு வார்த்தைகளை கலந்து பேசும் போது அது எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள்.

                                   இந்த கலவை புது மொழி கற்கும் ஒருவர் அதே மொழியை நன்கு அறிந்த இன்னொருவருக்கு உடனே  தகவல்கள் தெரிவிக்க பயன்படும் என்றால் ஒப்புக்கொள்ளலாம்.அல்லது  இரு சாராருக்கும் தெரிந்த பொது மொழியை பேசலாம். ஆனால் சரளமாக மொழியை கற்று முடித்த பிறகும் இந்த கலப்படம் ஏன் தொடர வேண்டும்.

                                   ஒரு மொழி நன்கு தெரிந்தால், அதை சரியான முறையில் குறைந்தது அதே மொழி தெரியும் மற்றொரு நபருடன் சரியாக தொடர்பு கொள்ள  முடியுமளவிற்கு பயன்படுத்த பழகலாம். அதே மொழியில் ஒரு இளநிலை பட்டம் பெறவோ  அல்லது நூறு சதவீதம் சரியாக அதை கற்றுக்கொள்ள வேண்டுமோ என்று அர்த்தம் இல்லை. அது அந்தந்த மொழிக்கு கொடுக்கும் உங்கள் ஈடுபாடை பொருத்தது. பல மொழிகள் தெரிந்தாலும் அதை அரைகுறையாகத் தான் கற்றுக்கொண்டிருக்கின்றோம்.

                                   பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்கள் எப்படி பேசியிருக்க வேண்டும் அல்லது அவர்கள் பயன்படுத்திய சொற்கள் என்ன என்று தெரியவில்லை. வரலாற்றில் மனித மொழி பற்றி விவரங்கள் சேகரித்து வைத்த ஆதாரங்கள் ஒரு எல்லை வரை தான் நமக்கு தெரியும்.  மனிதனின் பரிணாம வளர்ச்சி எப்படி தொடர்கிறதோ, அதே போல்  நாம் மனிதர்கள் பேசும் மொழிகளின் பரிணாம வளர்ச்சியை நிறுத்த முடியாது. எதிர்காலத்தில் ஒரு பொதுவான மொழி அல்லது ஒற்றை மொழி உருவாகலாம்  - அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் அதை வடிவமைக்கலாம்.


                                   ஆங்கிலத்தில்  பிற மொழி வார்த்தைகளை கலக்காமல் பல மணி நேரம் இடைவெளி இல்லாமல் பேசக்கூடிய ஆட்கள் பலர். எனவே இந்த கட்டுரையின் சவாலாக நான் தொடுப்பது : நீங்கள் குறைந்தது பத்து நிமிடங்கள் மற்ற மொழி சொற்கள் கலக்காமல் உங்கள் தாய்மொழியை  பேச முடியுமா? (தாய்  மொழி  தெரியாது என்றால், விரைவில் அதை கற்க முயற்சி செய்யுங்கள்)   நீங்கள் சவாலில் வெற்றி பெற்றால், நீங்கள் நம்பிக்கையுடன் உங்கள் சொந்த மொழி கற்றதற்க்கு கொஞ்சம் பெருமை படலாம். மனித மொழிகளின் பரிணாம வளர்ச்சி நல்ல முறையில் தொடரட்டும்....

--சிவசுப்பிரமணியன்.