ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

கவிதை 44 - மாசு

சீருந்தை சீறிட்டு செலுத்தும் 
அடுக்கு மாடி வீட்டு சீமான்கள்.

பேருந்தை பேரிரைச்சலோடு செலுத்தும் 
அரசு போக்குவரத்து போராளிகள்.

தானுந்தை புகை மண்டலமாக செலுத்தும்
மூன்று சக்கர வாகன மேதாவிகள்.

உந்துவளையை தலைக்கவசமில்லாமல் செலுத்தும்
இரு சக்கர வாகன நகர் பேசிகள்.

மிதிவண்டியை மறந்து விட்ட நவீன நடை பாதைகளில் 
மாசு படிந்த நகரத்தால் இயற்கையை மறந்து போன பாதசாரிகள்.

ஒலி ,ஒளி ,காற்று, நீர் என்று அனைத்திலும் கலந்து விட்ட மாசு,
கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கிறது மனிதனின் வயசு.

--சிவசுப்பிரமணியன்.

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

கட்டுரை 2 - தொழில்நுட்பத்தின் தாக்கம்

                                                ளர்ந்து வரும் அசாத்திய தொழில் நுட்பம் மனிதனை எப்படி புரட்டி போடுகிறது என்பதை தினசரி மனித நடைமுறைகள் நமக்கு உணர்த்துகின்றன. முதலில் பாதிக்க படுவது என்னவோ மனிதனின் மூளை தான். பிறகு உடல் உறுப்புக்கள் துவங்கி உள் உணர்வுகள் வரை இந்த அசுர வளர்ச்சி அடைந்த தொழில் நுட்பம் தாக்கி விடும் அபாயம் தெரிகிறது.

                                                  ஒன்றும் ஒன்றும் கூட்டினால் இரண்டு என்ற சுலபமான கணிப்புக்கு கூட சாதுர்யமான கைபேசியை நம்புகிறான் நவீன உலகின் மனிதன். மடிக்கணினியை தலையணையாக வைத்து தூங்குகின்றான். அலைபேசியை இசைக்கருவியாக காதில் பொருத்திக்கொண்டான். அருகிலிருக்கும் உணவு விடுதிக்கோ, மளிகைக்கடைக்கோ நடந்து செல்ல மறந்து விட்டான் (இரு சக்கர வாகனமோ, நான்கு சக்கர வாகனமோ துணை).


அப்பா, அம்மா, உறவினர்கள், நண்பர்கள் என்று அத்துணை தொடர்புகளையும் தொலைபேசியில் தொடர்பு கொள்வதை கூட விட்டு விட்டு இணையத்தில் சந்திக்கிறான் (நேரில் பார்த்து பேசுவது தான் வெகு காலங்களுக்கு முன்பே நின்று விட்டதே !!!)

செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களை உருவாக்க நிரல் மொழிகள் கற்றுக்கொள்ளும் மென்பொருள் பொறியாளர்களுக்கு தன் தாய் மொழி மறந்து இயற்க்கை அறிவு செயலற்ற நிலையை எட்டிகொண்டிருக்கிறது.

தொலைதூரம் வீற்றிருக்கும் செவ்வாய் மற்றும் புதன் கிரகங்களுக்கு ஏவுகணைகள் அனுப்பும் விஞ்ஞானிகளுக்கு அண்டை வீட்டுக்காரனின் பெயர் கூட தெரியாது.

முக நூலில் பல்வேறு முகபாவங்களை புகைப்படங்களாக பதிவேற்ற இளசுகளுக்கு நேரமிருக்கு, ஆனால் தன முகம் தனை பெற்றோர்களுக்கு காண்பிக்க நேரமில்லை.

இப்படி தொழில் நுட்பத்தின் வேகத்தை சமாளிக்க கற்றுக்கொள்வது எப்படி, மனித நேயத்தையும், பண்டைய கலாச்சாரத்தையும், மறந்து விடும் பேச்சு மொழிகளையும் கட்டி காப்பது எப்படி, சமச்சீராக இயந்திரமும் மனிதனும் கட்டுக்குள் இருப்பது எப்படி ? இப்படி பல கேள்விகள் நாம் சிந்தித்து பார்க்க வேண்டிய தருணம். மேலும் நான் எழுத இருக்கும் கட்டுரைகளில் இதை பற்றி விவாதிப்போம்....

வணக்கம்,
சிவசுப்பிரமணியன்...

சனி, 28 ஜூன், 2014

கனவு 16 - கனவுக்குள் கனவு - இரண்டாம் கனவு

                              நான்  எனது தம்பி , நண்பர்கள் இருவர் எங்கோ விடுமுறைக்கு சென்று விட்டு ரயில் நிலையத்தில் இரண்டு மணி நேரம் கழித்து வர இருக்கும் ரயிலுக்கு காத்துக்கிடக்கின்றோம். அப்பொழுது அங்கே ஒரு ரவுடி கும்பல் ஒன்று வருகிறது. அங்கு இருக்கும் யாவரையும் சோதித்து விட்டு எங்களையும் பரிசோதனை செய்கிறார்கள்.நான் மட்டும் சும்மா இருக்காமல் ஏன் இப்படி தராதரமில்லாமல் பழகுகிறீர்கள் என்று அதில் ஒருவனை பார்த்து வம்பு இழுத்து விடுகின்றேன். பிறகு அவன் என்னை முறைத்து விட்டு சென்று விடுகிறான்.


இரயில் வர ஒரு மணி நேரம் இருக்கும்.அப்போது அந்த ரவுடி கும்பல் தலைவனும் அடியாள் ஒருவனும் எங்களை சுற்றி விட்டு - ஏன் என்று கேள்வி கேட்டாயே - இதோ பதில் என்று அப்படியே அலேக்காக என்னை தூக்கிக் கொண்டு அருகிலிருக்கும் மைதானம் பக்கம் போனார்கள். எனது தம்பியும் நண்பர்களும் அதை தடுக்க முயன்றார்கள். ஆனால் அவர்களை வேறு சிலர் தடுத்து விட்டனர். பிறகு அந்த மைதானத்தில் கில்லி விஜய் -பிரகாஷ்ராஜ் கடைசி கட்ட சண்டை காட்சி நடந்தது என்று எண்ண வேண்டாம். என்னை அந்த அடியாள் பந்தை தூக்கி எறிவது போல் தூக்கி எறிந்தான், அடிதான்,உதைத்தான்.. நான் கத்துகிறேன் கதறுகிறேன்.எங்கும் வேடிக்கை மட்டும் தான் வழக்கம் போல்.யாரும் உதவுவதற்கு கூட வரவில்லை.பிறகு அந்நியனாக மாறு என்று உள் மனது சொன்னாலும்  நான் செயலற்று தான் கிடக்கிறேன்.

கண் முழித்து பார்க்கும் போது  தம்பி அருகிலிருந்தான். என்னை விட்டு விடுங்கள்,காப்பாற்றுங்கள் என்று பிதற்றினாயே என்று கேட்டான்.நீயும் தான் கூட இருந்தாய் என்றேன். நல்ல கனவு கண்டாய் என்று நகைத்தான். பிறகு தான் அது கனவு என்று நானும் உணர்ந்தேன். உடல் வலி லேசாக இருந்தது.
நண்பனும் நானும் காயம் கொண்டு பயணம் சென்று திரும்பி வந்த தூக்கத்தில் இப்படி கனவு வந்ததே என்று நொந்து கொண்டேன்.

மீண்டும் கண் விழித்து பார்க்கிறேன். நான் இரு கனவுகள் INCEPTION திரைப்படம் போல் பல நிலைகளில் கனவுகள் கண்டுள்ளேன் என்பதை உணர்ந்தேன். கனவு 16 முற்றும்.

மீண்டும் வேறு கனவோ,கவிதையோ,கட்டுரையோ வளம் வரும், மழை பொழியும் ....

சனி, 7 ஜூன், 2014

கனவு 16 - கனவுக்குள் கனவு - முதல் கனவு

கண்ணுக்குள் நிலவு என்று கேள்வி பட்டிருப்பீர்கள். ஆனால் இது கனவுக்குள் கனவு. பொதுவாக பல கனவுகள் மாறி மாறி வரும். ஆனால் இந்த முறை ஒரு கனவுக்குள் வேறு கனவு வந்தது. 'Inception' படம் போல் பல நிலைகள் நான் கனவு கண்டேன் என்று தான் சொல்லலாம். ஆச்சரியமாகத்தான் இருந்தது நான் விழித்த பிறகு.

நானும் எனது நண்பனும் திக்கு தெரியாத காட்டில் ஏதோ இடம் தெரியாத பாதை வழியாக நள்ளிரவில் கும்மிருட்டில் நடந்து செல்கிறோம்.பிறகு ஒரு மலைச்சரிவில் மாட்டிக்கொண்டு தடுமாறி உருண்டு விழுகின்றோம்.வெகு நேரம் உருண்டு திரண்டு ஆங்காங்கே உடம்பெல்லாம் காயம் பெற்று ஒரு மழைச்சாரலும் சில்லருவியின் தீண்டலுடன் தொலைவில் தெரியும் ஒரு குக்கிராமம் ஒன்றில் சென்று சாய்ந்து விடுகிறோம்.



நான் ஒரு மாட்டு தொழுவின் அருகே தூக்கி வீசப்பட்டு சுய நினைவில்லாமல் சிதறி கிடப்பதை உணர்கிறேன்.என் நண்பன் அதே குடிசை வீட்டின் முன் வாசலில் உள்ள முள்செடிகள் நிறைந்த தோட்டத்தில் பலத்த காயங்களுடன் படுத்திருக்கிறான்.பிறகு அந்த குடிசையில் வாழும் பாட்டி எங்கள் காயங்களுக்கு மருந்திட்டு திரும்பி ஊர் செல்ல வழியும் சொன்னார்கள்.எப்படியோ வீடு வந்து சேர்ந்த பிறகு நல்ல தூக்கத்தில் ஆழ்ந்து விட்டேன். இங்கே தான் எனது இரண்டாம் கனவு ஆரம்பித்திருக்க வேண்டும்..

--- தொடரும் ....

ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

கவிதை 43 - அங்கம் சொல்லும் புது அர்த்தம்

கண்கள்...
 கானாக்கரை தேடுதோ
 மனத்திரை காட்டுதோ 


கால்கள்...
  அறியா திக்குக்கு நடை போடுதோ
   புரியா பாட்டுக்கு நடனம் ஆடுதோ 


கைகள்...
   சிந்தனை சிற்பம் செதுக்குதோ
   கவிதையும் ஓவியமும் தீட்டுதோ


கை விரல்கள்...
   வீணை இசைப்பலகை மீட்டுதோ
   கணினி விசைப்பலகை பயிலுதோ 


செவிகள்...
  கேட்கா சொற்கள் கேட்குதோ
  கேட்கும் திறனை மறந்ததோ


மூக்கு...
   மாசு படிந்து மூச்சு வாங்க திணறுதோ
   இயற்க்கை வாசனை மறந்ததோ


நாக்கு...
   தாய் மொழி விட்டு கலப்பு மொழி பேசுதோ
    வீண் வம்புக்கு இழுக்குதோ 


மூளை...
  பயனற்ற தகவல் சேகரிக்கிறதோ
  செயற்கை நுண்ணறிவு படைக்குதோ


இதயம்...
  பிரிவா அன்பை நாடுதோ
   எதையும் தாங்கும் சக்தி பெற்றதோ

மற்ற அங்கங்களும் புது புது அர்த்தங்கள் சொல்லும்
-- சிவசுப்பிரமணியன் .....

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

கனவு 15 - இரட்டை நிலா

சில கனவுகள் நம்மை தூக்கத்திலிருந்து உடனே கண் முழித்து பார்க்க செய்து விடும். அது பயத்தினாலோ அல்லது கனவின் பயங்கரத்தினாலோ கூட இருக்கலாம். ஆனால் என்னை பயம், பயங்கரம், அதிசயம், நகைச்சுவை என்று அனைத்தும் ஒரு சேர காட்டிய கனவு இது.

நானும் எனது நண்பர்களும் தெருமுனையில் ஒரு உணவு விடுதியின் முன் அரட்டையடித்து கொண்டிருந்தோம்.திடீர் என்று எதிரே அமைந்திருக்கும் வீடுகள்,கடைகள், கட்டிடங்கள் யாவும் லேசாக குலுங்குகிறது.முதல் முறை வெகு சிலர் மட்டும் தான் அதை கவனித்திருக்க கூடும்.

பிறகு நாங்கள் நின்று கொண்டிருந்த இடமும், விடுதியும், வேகமாக குலுங்க துவங்கியது.பயங்கர நில நடுக்கம் ஒன்று விரைவாக வருகிறது என்று தெரிந்து நாங்களும் சுற்றியிருந்த மக்களும் பயத்தோடு ஓடுகின்றோம்.பிறகு பார்த்தால் ஆங்காங்கே நட்டு வைத்த தென்னை மரங்கள் வேரோடு வீடுகளின் கூரைகளை பதம் பார்க்கிறது. சிலரின் மேலேயே மரங்கள் சாய்கிறது. எங்கும் கூச்சல், சோகம், அழுகை நிரம்பிய காட்சிகள். இரவு நேரம் நெருங்கி விட்டதால் நில நடுக்கத்திலிருந்து பாதிக்கப்படுபவர்களை காப்பாற்றுவது என்று ஒரு பெரும் படை முயற்சி செய்கிறது.

நான் எனது குடும்பத்தார் இருக்கும் வீடு நோக்கி ஓடுகிறேன்.வழியில் ஒரு கூட்டம் அதிர்ச்சியில் வானத்தை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது.நானும் சற்றே நிமிர்ந்து பார்த்தேன்.ஆகா என்ன அதிசய காட்சி. வானில் இரட்டை முழு நிலவு தொலை நோக்கி இல்லாமலே தெள்ள தெளிவாக காட்சியளிக்கிறது. நாம் வேற்று கிரகம் வந்து விட்டோமோ என்று நினைப்பதற்குள் அந்த இடத்தில சிலர் அதை அலைபேசியில் புகைப்படம் எடுத்து கொண்டிருப்பது கிரகம் மாறவில்லை என்பதை ஊர்ஜித படுத்தியது.



உலகமே நில நடுக்கத்தாலும், எரிமலையாலும் அழிந்து கொண்டிருக்கையில் இரட்டை நிலாக்காட்சியை படமெடுக்க நினைக்கும் மனித உள்ளதை நினைத்து சிரிப்பதா, சிந்திப்பதா என்பதுக்குள் கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டேன்.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

கட்டுரை 1- தமிழ் மொழி - தொண்மையான மொழி

சங்க கால தமிழ், பண்டைய தமிழ், செந்தமிழ் / தூயதமிழ், நவீன தமிழ் என்று மாறி வரும் தமிழ் மொழியை பற்றி முதலில் எனது கட்டுரையை இந்த கவிதை மழை வலைப்பூவில் எழுதலாம் என்று முடிவு செய்தேன்.

தமிழ் மொழியின் தொண்மையை பற்றி வெளிநாட்டு பேராசிரியிர்கள் தமிழில் தெள்ள தெளிவாக சொற்ப்பொழிவு நடத்தும் இந்த காலத்தில், தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கு தமிழில் பேசுவதை விட ஆங்கிலத்தில் பேசுவது சுலபம் என்று கருதுவதே மாபெரும் வெட்கக்கேடு. ஆங்கில மொழியின் தாக்கம் என்னவோ நம் தினசரி வாழ்க்கையில் சகஜமாகிவிட்டது. ஆனால் முடிந்த வரை தமிழ் வார்த்தைகளை தமிழ் தெரிந்த வரிடம் முழுமையாக தமிழில் கலந்துரையாட நாம் ஏன் தயங்க வேண்டும்.

எந்த மொழியை கற்றாலும் நாம் அதை அரை குறையாக தான் கற்றுக்கொண்டிருக்கின்றோம். தினசரி வாங்கும் பொருட்களில் தான் கலப்படம் என்றால் மொழியிலும் கலப்படம். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், எனது பள்ளி பருவத்தில் தமிழ் ஒரு பாடமாக கூட இருந்ததில்லை - இரண்டாம் நிலை பாட மைய குழுவில் நமது தேச மொழி ஹிந்தி தான் எனக்கு இரண்டாம் மொழி. ஆங்கிலம் முதல் மொழி. ஆனால் தமிழை தாய் மொழியாக பெற்றது என் பாக்கியம். எனது அப்பா, அம்மா சொல்லிக்கொடுத்த தமிழ் உயிர்-மெய் எழுத்துக்கள் வைத்து இவள்ளவு தூரம் தமிழில் விசை பலகையில் கட்டுரை எழுதவது வரை தமிழ் மேல் கொண்டுள்ள என் ஆர்வம் குறையவில்லை. 

தமிழ் மொழியின் வரலாற்றை அலசி பார்த்தால் சங்க காலத்தில் தோன்றிய தொல்காப்பியம் தான் முதலில் கிடைத்த பொக்கிஷம் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். கி.மு இரண்டாம் நூற்றாண்டு முதல் தமிழ் மொழியின் படைப்புகள் ஓலை சுவடிகளாக சேகரிக்கப்பட்டு வரலாற்று சான்றாக விளங்குகிறது. சங்க கால தமிழை ஆராய்ச்சி செய்த அத்துணை தமிழ் வல்லுனர்களுக்கு என் இரண்டாவது வணக்கம். சங்க கால தமிழை படைத்த பழம் பெரும் புலவர்களுக்கு என் முதல் வணக்கம்.
பழம் பெருமை வாய்ந்த செம்மொழியாம் தமிழ் மொழி.

வாழ்க தமிழ்,
சிவசுப்பிரமணியன் ...

சனி, 13 ஜூலை, 2013

கனவு 14 - காட்சி 2 - நாடும் காடும்

காட்சி 2 

எங்கோ ஒரு நடுக்காட்டில் வெகு நேரமாக பிரயாணம் செய்து கொண்டிருக்கிறேன். வீட்டுக்கு திரும்ப செல்லும் வழி தொலைந்து போய் இப்படி அலைகிறேன் என்று வருத்தப்படுகிறேன். இரவு நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது.

திடீர் என்று இரு சிங்கங்கள் கர்ஜனையுடன் என் மேல் பாய்ந்தது. நானும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடுகின்றேன்.வேகமாக அங்கு தெரியும் மூங்கில் மரத்தில் எப்படியோ ஏறியும் விட்டேன். பல மரங்கள் அடுக்கு அடுக்காக நிற்கும் அடர்த்தியான காடு என்பதால் மரம் விட்டு மரம் தாவுகிறேன்.எப்படியோ தாவி தாவி நகர எல்லைக்கு வந்து சேருகிறேன்.

நல்ல நேரமாக அங்கு ஒரு ஏரி தெரிகிறது. என் தாகத்தை தனித்து விட்டு ஒற்றையடி பாதையில் நடக்கிறேன். உடனே அங்கு ஒரு பேருந்து வேகமாக செல்வது தெரிகிறது. அதில் எனது இரு நண்பர்கள் என்னை பார்த்து விட்டு பேருந்தை நிறுத்துகிறார்கள். எப்படியோ அதில் ஏறி கடைசியில் விடு வந்து நிம்மதி பெருமூச்சு விடுகிறேன்.

மீண்டும் பல காட்சிகள் தோன்றி மறைந்தது. அனால் ஞாபகம் வைத்த காட்சிகள் இப்படி எழுத்துக்களாக வடிவம் பெற்றது.

கனவு 14 - காட்சி 1 - பாதாள உலகம்

பல கனவுகள்  தொடர்ச்சியாக ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாமல் வருவதுண்டு.அது போல் வரும் காட்சிகள் நாம் கண் விழித்து பார்க்கும் பொழுது ஞாபகம் இருப்பதில்லை. இன்றும் அப்படிதான் இரு மாறுபட்ட காட்சிகள் , இடங்கள் , பயமுறுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றன.

காட்சி 1 - 

சுரங்க பாதை வழியாக ஒரு இருட்டு குகையை தேடி நான் தீப்பந்தம் ஏந்தி நடந்து செல்கிறேன். ஒரு கதவு என்னை பாதி வழியில் தடுத்து விடுகிறது. திரும்பி நடப்போம் என்று பின் பக்கம் முகத்தை திருப்புகிறேன்.
பேரதிர்ச்சியுடன் ஒரு வயதான மூதாட்டியின் உருவம். 

சூனியம் செய்யும் மாயக்கிழவியின் தோற்றம். கோரமான சிரிப்பொலி சுரங்கம் எங்கும் எதிரொலிக்கிறது. பிறகு என்னை அழைத்து கொண்டு பாதாள உலகம் செல்லும் வழியெங்கும் எலும்பு கூடுகள். இது என்ன விக்கிரமாதித்தன் வேதாளத்தோடு செல்லும் பயணம் போல் அல்லவா இருக்கிறது. 

பின் அந்த இருட்டு குகை சிறை போல் தோற்றம் அளித்தது. பிறகு என்ன  நடந்தது என்று நினைப்பதற்குள் அடுத்த காட்சி .....

                                                                                                            தொடரும் ....

ஞாயிறு, 19 மே, 2013

கனவு 13 - நடு இரவில்

இந்த கனவை திகில் நாவல்களில் சேர்க்க வேண்டுமா என்று நீங்கள் இதை படித்து விட்டு முடிவு செய்யலாம்.

திருவிழா பார்க்க நான்  ஊருக்கு குதூகலமாக புறப்படும் காட்சியுடன் இந்த கனவு ஆரம்பமாகிறது. சில பால்ய கால நண்பர்களை அங்கு சந்தித்து பழைய கதைகள் யாவும் பேசுகின்றோம். எங்கள் உறவினர்கள் மனைகள் யாவும் நான் தங்கியிருக்கும் பாட்டியின் வீட்டுக்கு பக்கத்திலே அமைந்திருந்தது.

கொஞ்ச தூரம் நடந்தால் அங்கு கோவில் பிரகாரம் நம்மை வரவேற்கிறது.
கடல் அலைகள் ஓயாமல் கரை திரும்பும் ஓசை நம் காதுகளில் ஒலிக்கிறது.
இரவு நேரம் எல்லாரும் தூங்கும் பொழுது வேகமாக கதவு தட்டும் சத்தம்.
நான் கண் முழித்து கதவை திறந்து பார்த்தால் ஒரு ஊமை பெண்.

ஏதோ ஒரு காகிதத்தை கையில் கொடுத்து விட்டு செல்கிறாள். அதில் சில சித்திர குறிப்புகள் மட்டும். அவை இரு மனிதர்கள் சடலங்களாக நடமாடும் குறிப்பு. எனது நண்பர்களையும் உறவினர்களையும் எழுப்பி அதை  காண்பிக்கின்றேன். யாவரும் திகைத்து பார்த்து விட்டு - இது வெறும் வேடிக்கை பூசல் - கவலை வேண்டாம் என்று என்னை நன்றாக தூங்கு என்றும் சொல்லி விட்டு அவர்களும் படுத்து விட்டார்கள் .

வெகு நேரம் சென்ற பின் நடு இரவில் மீண்டும் கதவு தட்டும் ஓசை.யாவரும் பயத்தோடு ஜன்னல் வழியாக எட்டி பார்க்கிறோம்.அங்கு கோரமாக இரு பிரேத உடல்கள் அலங்கோல உடையுடன் நிற்பது தெரிகிறது.கண்களில் ரத்தம் வடிகிறது. அதில் ஒருவனுக்கு இரு கைகளும் பாதி வெட்டப்பட்ட நிலையில் தொங்குகிறது.மீண்டும் அவர்கள் கதவை வேகமாக தட்டவும், அதை உடைத்துக்கொண்டு உள்ளே நுழையவும் எத்தனிக்கிறார்கள். கதவை திறந்து விட்டால் நாங்கள் யாவரும் காலி.. அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிப்பதற்குள் கனவு காற்றோடு கலைந்து விட்டது.