சனி, 13 ஜூலை, 2013

கனவு 14 - காட்சி 2 - நாடும் காடும்

காட்சி 2 

எங்கோ ஒரு நடுக்காட்டில் வெகு நேரமாக பிரயாணம் செய்து கொண்டிருக்கிறேன். வீட்டுக்கு திரும்ப செல்லும் வழி தொலைந்து போய் இப்படி அலைகிறேன் என்று வருத்தப்படுகிறேன். இரவு நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது.

திடீர் என்று இரு சிங்கங்கள் கர்ஜனையுடன் என் மேல் பாய்ந்தது. நானும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடுகின்றேன்.வேகமாக அங்கு தெரியும் மூங்கில் மரத்தில் எப்படியோ ஏறியும் விட்டேன். பல மரங்கள் அடுக்கு அடுக்காக நிற்கும் அடர்த்தியான காடு என்பதால் மரம் விட்டு மரம் தாவுகிறேன்.எப்படியோ தாவி தாவி நகர எல்லைக்கு வந்து சேருகிறேன்.

நல்ல நேரமாக அங்கு ஒரு ஏரி தெரிகிறது. என் தாகத்தை தனித்து விட்டு ஒற்றையடி பாதையில் நடக்கிறேன். உடனே அங்கு ஒரு பேருந்து வேகமாக செல்வது தெரிகிறது. அதில் எனது இரு நண்பர்கள் என்னை பார்த்து விட்டு பேருந்தை நிறுத்துகிறார்கள். எப்படியோ அதில் ஏறி கடைசியில் விடு வந்து நிம்மதி பெருமூச்சு விடுகிறேன்.

மீண்டும் பல காட்சிகள் தோன்றி மறைந்தது. அனால் ஞாபகம் வைத்த காட்சிகள் இப்படி எழுத்துக்களாக வடிவம் பெற்றது.

கனவு 14 - காட்சி 1 - பாதாள உலகம்

பல கனவுகள்  தொடர்ச்சியாக ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாமல் வருவதுண்டு.அது போல் வரும் காட்சிகள் நாம் கண் விழித்து பார்க்கும் பொழுது ஞாபகம் இருப்பதில்லை. இன்றும் அப்படிதான் இரு மாறுபட்ட காட்சிகள் , இடங்கள் , பயமுறுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றன.

காட்சி 1 - 

சுரங்க பாதை வழியாக ஒரு இருட்டு குகையை தேடி நான் தீப்பந்தம் ஏந்தி நடந்து செல்கிறேன். ஒரு கதவு என்னை பாதி வழியில் தடுத்து விடுகிறது. திரும்பி நடப்போம் என்று பின் பக்கம் முகத்தை திருப்புகிறேன்.
பேரதிர்ச்சியுடன் ஒரு வயதான மூதாட்டியின் உருவம். 

சூனியம் செய்யும் மாயக்கிழவியின் தோற்றம். கோரமான சிரிப்பொலி சுரங்கம் எங்கும் எதிரொலிக்கிறது. பிறகு என்னை அழைத்து கொண்டு பாதாள உலகம் செல்லும் வழியெங்கும் எலும்பு கூடுகள். இது என்ன விக்கிரமாதித்தன் வேதாளத்தோடு செல்லும் பயணம் போல் அல்லவா இருக்கிறது. 

பின் அந்த இருட்டு குகை சிறை போல் தோற்றம் அளித்தது. பிறகு என்ன  நடந்தது என்று நினைப்பதற்குள் அடுத்த காட்சி .....

                                                                                                            தொடரும் ....

ஞாயிறு, 19 மே, 2013

கனவு 13 - நடு இரவில்

இந்த கனவை திகில் நாவல்களில் சேர்க்க வேண்டுமா என்று நீங்கள் இதை படித்து விட்டு முடிவு செய்யலாம்.

திருவிழா பார்க்க நான்  ஊருக்கு குதூகலமாக புறப்படும் காட்சியுடன் இந்த கனவு ஆரம்பமாகிறது. சில பால்ய கால நண்பர்களை அங்கு சந்தித்து பழைய கதைகள் யாவும் பேசுகின்றோம். எங்கள் உறவினர்கள் மனைகள் யாவும் நான் தங்கியிருக்கும் பாட்டியின் வீட்டுக்கு பக்கத்திலே அமைந்திருந்தது.

கொஞ்ச தூரம் நடந்தால் அங்கு கோவில் பிரகாரம் நம்மை வரவேற்கிறது.
கடல் அலைகள் ஓயாமல் கரை திரும்பும் ஓசை நம் காதுகளில் ஒலிக்கிறது.
இரவு நேரம் எல்லாரும் தூங்கும் பொழுது வேகமாக கதவு தட்டும் சத்தம்.
நான் கண் முழித்து கதவை திறந்து பார்த்தால் ஒரு ஊமை பெண்.

ஏதோ ஒரு காகிதத்தை கையில் கொடுத்து விட்டு செல்கிறாள். அதில் சில சித்திர குறிப்புகள் மட்டும். அவை இரு மனிதர்கள் சடலங்களாக நடமாடும் குறிப்பு. எனது நண்பர்களையும் உறவினர்களையும் எழுப்பி அதை  காண்பிக்கின்றேன். யாவரும் திகைத்து பார்த்து விட்டு - இது வெறும் வேடிக்கை பூசல் - கவலை வேண்டாம் என்று என்னை நன்றாக தூங்கு என்றும் சொல்லி விட்டு அவர்களும் படுத்து விட்டார்கள் .

வெகு நேரம் சென்ற பின் நடு இரவில் மீண்டும் கதவு தட்டும் ஓசை.யாவரும் பயத்தோடு ஜன்னல் வழியாக எட்டி பார்க்கிறோம்.அங்கு கோரமாக இரு பிரேத உடல்கள் அலங்கோல உடையுடன் நிற்பது தெரிகிறது.கண்களில் ரத்தம் வடிகிறது. அதில் ஒருவனுக்கு இரு கைகளும் பாதி வெட்டப்பட்ட நிலையில் தொங்குகிறது.மீண்டும் அவர்கள் கதவை வேகமாக தட்டவும், அதை உடைத்துக்கொண்டு உள்ளே நுழையவும் எத்தனிக்கிறார்கள். கதவை திறந்து விட்டால் நாங்கள் யாவரும் காலி.. அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிப்பதற்குள் கனவு காற்றோடு கலைந்து விட்டது.

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

கனவு 12 - ஆவியின் மொழி

ஆவிகளோடு பேசும் பல முறைகளை நான் கேட்டதுண்டு, சில திரைப்படங்களில் பார்த்ததும் உண்டு. ஆனால் இந்த கனவில் நான் கண்டது மிகவும் புதுமையானது.

நான் ஒரு வீட்டு வாசலில் அமர்ந்திருக்கிறேன். வீட்டு முற்றம் தெள்ள தெளிவாக காட்சியளிக்கிறது. அங்கிருந்த கோலப்பொடி எடுத்து நான் ஏதோ எழுத முயற்சிக்கிறேன். "யார் ?" என்று கோலம் போடுகிறேன். மறுபுறத்தில் "உன் ஆச்சி" என்று பதில் வருகிறது. எனக்கோ திக்கென்றது. திடீர் என்று ஆவிகள் சூழ்ந்த உலகத்தில் அமர்ந்திருப்பது போல் உணருகிறேன்.

பிறகு கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து கொண்டு "நீங்கள் எந்த ஆச்சி ?" என்று கோலத்தால் கேட்கிறேன்.  சற்று தாமதமானாலும் பதில் வந்தது - "கனகம்மா".

நான் அசந்துபோய் அதிர்ச்சியில் சிலையானேன். ஏனென்றால் அந்த பெயர் எனது இறந்து போன ஒரு பாட்டியின் உண்மையான பெயர்.அடுத்து பல கேள்விகள் நான் கேட்பதற்குள் கனவு கலைந்து விட்டது .....

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

கனவு 11 - எகிப்து மம்மி

கனவுகள் சில நல்ல நினைவுகளாக மனதில் பதிந்து விடும். மற்று பல அச்சுறுத்தும் பயங்கரமாகவும் பயமுறுத்தவும் செய்து விடும்.  சிலருக்கு கனவில் கண்டது அடுத்த நாளோ, பிறகு எப்பவாவதோ அதன் படியே நடந்து விடும்.சிலருக்கு முன் எப்பொழுதோ நடந்த சம்பவம் ஆழ் மனதில் பதிந்து கனவுலகில் வந்து நிழல் காட்சி தரும். இது போல் நான் கண்ட ஒரு கனவு மூன்று வருடங்கள் முன் நடந்து முடிந்த என் தாத்தாவின் இறுதி அஞ்சலி யுடன் துவங்கியது.

நானும் எனது சொந்த பந்தங்களும் - எனது தாத்தா  இறந்த பிறகு, அவரது உடலை தகனம் செய்ய கடற்கரைக்கு எடுத்து செல்லும் காட்சி தெரிகிறது. அழுகையும் சோகமும் ஆங்காங்கே தெளிவாக காண முடிகிறது. தகன காரியம் முடிந்து கொண்டிருக்கும் நேரம் கடல் அலைகளின் பேரிரைச்சல் ஒலிக்கிறது. தூரத்தில் கடலின் மேல் மட்டத்தில் ஒரு சடலம் மிதந்து கரையோரம் வருகிறது....

திடீர் என்று எனது நண்பரின் காலை பற்றி இழுக்கிறது. நண்பர் அதை விடுவித்து கொண்டு மிரண்டு ஓடுகிறார். கொஞ்ச நேரத்தில் அந்த சடலம் எகிப்து மம்மி போல அங்கு கூடியிருந்த யாவரையும் துரத்துகிறது. நானும் எனது சகோதரர்களும் , மாமாக்களும் பயந்து ஓடுகின்றோம்.

அனால் விடாது கறுப்பு போல் அந்த சடலம் ஓடி வந்து என்னை உடும்பு பிடி பிடித்தது.நான் அலறியடித்து கீழே விழுகின்றேன். அதே சமயம் கடலின் அலைகளை கவனித்தால் பன்மடங்கு சடலங்கள் மிதந்து வருவது யாவரையும் மேலும் அச்சுறுத்தியது. என்னை வீழ்த்திய அந்த சடலம் என் மேல் அமர்ந்து கொண்டு எனக்கு புரியாத வேற்று கிரக மொழியில் பிதற்றியது.

அதன் செய்கையை வைத்து எனக்கு புரிந்தது  ஒரு விஷயம் -
நாம் தேடி வந்த உயிரினங்கள் இந்த கிரகத்தில் இல்லை என்பது போல் தலையசைத்து விட்டு மாயமாக காற்றில் மறைந்தது.  உடனே கடலில் மிதந்து வந்த மற்ற வேதாள சடலங்களும் எழுந்து வந்து கொண்டிருக்கும் போதே மறைந்தன. அதிர்ச்சியில் நான் கண்ட அந்த கனவும் மறைந்தது ........!!!!

சனி, 23 மார்ச், 2013

கனவு 10 - சுனாமி

அதிர வைக்கும் நில நடுக்கம் மிக விரைவாக கடலின் ஆழத்தை கிழித்து கொண்டு நாங்கள் வசிக்கும் நகரத்தை நெருங்கிக்கொண்டு இருந்தது.கடலின் அருகில் முகாமிட்டிருந்த குடிசைகள் யாவும் தரைமட்டமாக மாறியிருந்தது.

அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் நானும் என் தம்பியும் மேல் தட்டு மொட்டை மாடி வரை ஓடிக்கொண்டும் - கடல் அலைகள் அச்சுறுத்தும் காட்சியை தொலைவில் பார்த்துக்கொண்டும் - அயல்வாசிகளை தப்பித்துக்கொள்ளும் படி எச்சரிக்கின்றோம்..

எனது கையில் அலைபேசியும் விடாமல் சிணுங்குகிறது.மனம் அலை பாயும் வேலையில் கடல் அலை ஆக்ரோஷமாக கட்டிடங்களை காலி செய்து கொண்டிருந்தது ! அனைவரும் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டு மீண்டும் மூச்சு விடுகின்றோம். எங்கும் கூக்குரல் அலையின் பேரிரைச்சலுக்கு போட்டியாக !!!

இது தான் உலகின் அழிவுக்கு ஆரம்பம் போலும் - பனை மரங்களும் வேரோடு மிதந்து செல்லும் போது தான் நினைக்க தோன்றியது - இதன் பெயர் சுனாமி என்று !!! இது தான் சுனாமியா என்று யோசித்து முழித்து பார்த்தால் கனவு கண்டேன் என்பது நினைவுக்கு வந்தது.

--சிவசுப்பிரமணியன்

வெள்ளி, 22 மார்ச், 2013

கனவு 9 - புலியும் சிறுத்தையும்

நானும் என் மாமாவும் பழைய கதைகள் , நினைவுகள் பற்றி பேசிக்கொண்டே
கிராமத்தின் எல்லையில் அமைந்திருந்த கோவில் வரை நடந்தோம்.உடனே காட்டிலிருந்து பதுங்கி வந்த ஒரு புலி கிராமத்துக்குள் தன் வேட்டையை துவங்கியது.தூரத்தில் நடந்து போகிற சில மனிதர்களை அது தாக்க பாய்ந்தது.
அந்த நிமிடம் நாங்கள் இருவரும் கோவிலுக்குள் நுழைந்து விட்டோம்.அடுத்த ஆச்சரியம் என்ன வென்றால் கோவிலின் பிரகாரத்தில் ஒரு சிறுத்தை!

அதை பார்த்தவுடன் எனக்கு திக்கென்றது.யோசிக்காமல் நாங்கள் இருவரும் கோவிலின் கோபுரத்தில் ஏறி அமர்ந்து கொண்டோம். க்ஷண நேரத்தில் அங்கு வந்திருந்த அனைவரும் புலிக்கும் சிறுத்தைக்கும் இறையாயினர்.பிறகு சில கிராம மக்கள் ஆயுதங்கள் திரட்டி அங்கிருந்த புலியை ஒரு கை பார்த்தார்கள்.

இதற்க்குள் சிறுத்தை தப்பி ஓடிவிட்டது.இந்த களேபரம் முடிந்த வுடன் கொஞ்சம் அமைதி ! நானும் மாமாவும் கீழே இறங்க ஆயித்தமானோம். ஆனால் சில கிராமத்து வீரர்கள் அந்த சிறுத்தையை தோளில் சுமந்து கொண்டு வந்தார்கள். திடீரென்று அதை எங்கள் முன் வைத்தார்கள்.அது கண் திறந்து பேசி சிரித்து விட்டு தமிழில் பேசவும் ஆரம்பித்தது. என்ன ஆச்சரியம் !!
பிறகு தான் தெரிந்தது அது சிறுத்தை வேடம் பூண்ட ஒரு கிராமத்து இளைஞன் என்று ... 

பிறகு கண் விழித்து பார்த்து யோசித்த போது எல்லாமே கனவு. கனவுலகில் உலா வரும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் சில நேரம் தொடர்பு கொஞ்சம் கூட இருக்காது போலிருக்கு ....

-- சிவசுப்பிரமணியன் .

சனி, 29 டிசம்பர், 2012

கவிதை 42 - சில நொடிகள்

நெடு நாள் பழகிய நண்பனுக்காக
ஒரு நொடி காத்திருக்க வில்லை ....
சில நொடிகள் பார்த்த பெண்னுக்காக
ஒரு நாள் உன் விழிகள் ஏன் காத்திருக்கின்றது ***

நெடு நேரம் நிற்கும் முதியவருக்காக
அமர இடம் தர மனமில்லை ....
சில நொடிகள் நின்ற பெண்னுக்காக
உன் கால்கள் ஏன் வலிக்கின்றது ***

நெடுங்காலமாகியும் உன் குரலை நெடுந்தூரம்
உள்ள உன் பெற்றோர்கள் கேட்கவில்லை ....
சில நொடிகள் புன்னகைத்த பெண்னுக்காக
வாழ்நாள் முழுதும் பேச உன் நாவு ஏன் துடிக்கின்றது ***

நெடுஞ்சாலையில் அதிவேகமாக இரு சக்கர 
வாகனத்தை செலுத்தும் பொழுது பதற்றமில்லை ....
சில நொடிகள் பேசலாம் என்ற பெண்னுக்காக 
நடுநிசி வரையில் தூக்கமில்லாமல் உன் இதயம் ஏன் படபடக்கின்றது ***

நெடுந்துயரம் பஞ்சமாக வந்த போதிலும்
வஞ்சமில்லா உன் நெஞ்சம் கலங்கவில்லை 
சில நொடிகள் மௌனகீதம் பாடும் பெண்னுக்காக
கஞ்சமில்லா உன் வாழ்க்கை ஏன் தஞ்சமடைகிறது ***

மறுபடியும் சில நொடிகளுடன் சந்திப்போம்,
சிவசுப்பிரமணியன் ***

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

கனவு 8 - சிறைச்சாலை

மீண்டும் ஒரு சவாலான பயணம். இதில் நான் மட்டும் தான். தங்க நிற கழுகுகளின் கூடாரம் என்னை வரவேற்கிறது. எனது பார்வை ராட்சத கழுகு முதல் எறும்பின் அளவு கொண்ட கழுகு வரை விரிகிறது.உள்ளங்கையில் அடங்கி விடும் கழுகுகளை எடுக்க முயன்ற பொது அதன் கூர்மையான அலகுகள் என்னை பதம் பார்க்க ஆரம்பித்து விட்டன.வலி தாங்காமல் அதை விட்டு விட்டு தங்க நிற கழுகுகளின் சாம்ராஜ்யத்திடம் விடை பெற்றேன்.

ஆள் நடமாட்டமில்லாத பாழடைந்த வீடு தெரிகிறது.வீட்டுக்குள் மெல்ல நுழைந்தவுடன்  வெள்ளை திரவத்தால் ஒரு மனித சிலையும், கருப்பு திரவத்தால் ஒரு மனித சிலையும் தென் படுகிறது.அருகில் சென்று அந்த சிலைகளை தொட்டவுடன் அவை உயிர் பெற்று என்னை துரத்த ஆரம்பிக்கின்றன.

சிறிய வீடு போல காட்சியளித்த அந்த வீடு பல மடங்கு பெரியதாக உயரவும் நீளவும், எனது ஓட்டம் மறைந்திருந்த அறைகளுக்குள்.பிறகு தான் நான் கவனித்த போது அறை  எங்கும் மனிதர்கள் சுய நினைவில்லாமல் சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை உணர்கிறேன்.மிக உயரத்திலிருக்கும் அறை வரை அந்த சிலை மனிதர்கள் என்னை பின் தொடர்ந்தார்கள்.

அங்கே இரு குழாய்களில் தீக்குழம்பு வடிந்து கொண்டிருப்பதை கண்டவுடன் சிலை மனிதர்கள் நின்று விட்டார்கள்.எப்படியோ அவர்களை தீக்குழம்பில் தள்ளி விட்டு அங்கிருந்து தப்பித்தேன்.சிறு வெளிச்சம் தான் ஒவ்வொரு அறைக்குண்டான சாப-விமோசனம் என்று அங்குள்ள கல்வெட்டுகளில் பதிந்துள்ளது.எனது கைபேசியில் உள்ள வெளிச்சத்தை பயன்படுத்தி எல்லா மனிதர்களையும் சிறையிலிருந்து விடுவித்தேன்.


கனவு 7 - பறக்கும் ரயில்

நானும் எனது பள்ளி நண்பர்கள் சிலரும் ஒரு ரயிலில் பயணம் சென்று கொண்டிருகின்றோம்.சில மணி நேரங்களுக்கு பிறகு நான் ரயிலின் ஜன்னல் வழியாக கவனித்த போது அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்.அந்தரத்தில் ரயில் வேகமாக சென்று கொண்டிருக்கிறது.

வயிற்றுக்குள் பட்டாம் பூச்சி பறக்கும் அனுபவம்.பறக்கும் ரயிலை தரையில் நிற்க்கும் பார்வையாளர்கள் பிரமிப்போடு ரசிப்பதை நாங்கள் யாவரும் ரயிலில் இருந்த படியே பார்த்து மகிழ்கிறோம்.அசையும் கட்டிடங்கள், ஆர்பரிக்கும் விளக்குகள், நகைக்கும் இயந்திர மனிதர்கள், கணிப்பொறி ஊடாடு அமைப்புகள்,கதிர்வீச்சு மூலம் இனைய விளம்பரங்கள் என்று செயற்கை நுண்-அறிவில் சுழலும் உலகத்தை வட்டமிட்டு பறந்தது நாங்கள் அமர்ந்த பறக்கும் ரயில்.

துணைக்கோள் மாய வானொலி மூலம் அடுத்த ரயில் நிலையத்தின் பெயரை எதிரொலித்தது. இனைய விளம்பரங்கள் ஒன்றில் செவ்வாய் - புதன் ஆகிய கிரகங்களுக்கு பயணம் செல்ல வேண்டிய முன் பதிவு தேதியும்,கட்டணமும் அறிவிப்பதை உணர்ந்தேன்.அடுத்த ரயில் நிலையத்தை நெருங்கும் போது பறக்கும் ரயில் மெதுவாக தரை இறங்குகிறது.

மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.இருபத்தைந்தாம் நூற்றாண்டிலும் மக்கள் தொகை குறைந்த பாடில்லை.ஒளியை விட வேகமாக பறக்கும் இந்த ரயில் உலகை சுற்றி வரும் என்று ஒலிபெருக்கியில் அறிவிப்பு.மக்கள் வெள்ளம் ஆரவாரத்தோடு அவரவர் இருக்கையில் அமர்ந்த பின் மீண்டும் மின்னல் வேக ரயில் வானை நோக்கி பறந்தது ...............!