சனி, 2 ஏப்ரல், 2016

கட்டுரை 7 - உலக திரைப்படங்களில் பாசத்தின் பங்கு - ஒரு திரை அலசல்

                     கருப்பு வெள்ளை திரைப்படங்கள் வெளியான காலம் முதல் மூன்று, நான்கு பரிமாணங்களில் (3D,4D) 360 பாகை (360 degree) பார்வையில் அகல திரை அரங்குகள் (IMAX Theater) மத்தியில் மெய் நிகர் கண்ணாடிகருவியை (Virtual Gear 3D glass) கண்களில் மாட்டி கொண்டு, எண்ணியல் ஒலிகளை (Digital DTS) சுற்றியும் தெறிக்க விட்டு, நவீன நிறங்கள் பூசிய நிகழ் படங்கள் (Color Screen) வரை -  குடும்பம், பாசம், பந்தம், அன்பு, நட்பு, காதல், சண்டை, பயம், புன்னகை, நகைச்சுவை, படபடப்பு, விறுவிறுப்பு என்று நகரும் கதை, திரைக்கதைகள் ஏராளம்.

இப்படி உலக திரைக்காவியங்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைக்கும் தருணத்தில் மனித உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்கும் திரை இயக்குனர்கள் இருக்கிறார்கள். பாசத்தை திரையில் காட்டி கண்களில் கண்ணீரை வரவழைக்கும் மாயாஜாலம்.  வெவ்வேறு மொழிகளில் தந்தை மகன் பாசம், தந்தை மகள் பாசம், தாய் பாசம், நண்பனின் நேசம் என்று திரைப்படங்களின் பட்டியல் நீளும்.  கருப்பு வெள்ளை காலத்தில் எண்ணில் அடங்காத படங்களை அடுக்கி விடலாம்.

தமிழ் மொழியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படங்கள் எத்தனையோ இருக்கின்றது. அதில் பா  வரிசையில் வெளி வந்த சிவாஜி படங்கள் பங்கு அதிகம். இதை 1950 -1970 கால கட்டம் என்று எடுத்து கொண்டால், 1980-2010 களில் திரைப்படங்கள் பல மனதை வருடியது. நடிகர் சரத்குமார் நடித்த நட்புக்காக, நாட்டாமை, சூர்யவம்சம், சமுத்திரம் , நடிகர் மம்மூட்டி நடித்த ஆனந்தம், நடிகர் பார்த்திபன் நடித்த அழகி பல முறை பார்த்தும் சலிக்காத பாசப்படங்கள். 2006ல் இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் வெளி வந்த வெயில்,  இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் வெளி வந்த எம் மகன் ஆகிய திரைப்படங்கள் தந்தை-மகன் பாசத்தை உணர்த்தியது.நடிகர் விக்ரம் - பேபி சாரா நடிப்பில் தமிழ் மொழியில் வெளிவந்த தெய்வ திருமகள் திரைப்படத்தில் தந்தை மகள் பாசத்தை அற்புதமாக சொல்லியிருப்பார்கள்.

2015ல் ஹிந்தி மொழியில் வெளிவந்த பஜ்ரங்கி பாயிஜான் நாடு - வயது - மொழி - மதம் என்று எந்த பேதமும் பாராமல் பாசத்தை காட்டும் அழகான திரைப்படம். மௌனத்தை வைத்தே சத்தமாக சிந்தையை தூண்டும் ஆறு வயது சிறுமி ஷாஹிதாவின் நடிப்பு கண் கலங்க வைத்து விடுகிறது.எப்பாடு பட்டாவது பெற்றோர்களிடம் குழந்தையை சேர்த்து விட வேண்டும் என்று ஒரே லட்சியம் கொண்டு அப்பாவி நடிப்பில் அசத்தல் காட்டியிருக்கிறார் சல்மான் கான்.மனித உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து திரைக்கதையை கச்சிதமாக நகர்த்தி சென்றுள்ளார் இயக்குனர் கபீர் கான். 

2003ல் கொரியன் மொழியில் வெளிவந்த Miracle in Cell No.7 என்னை வியக்க வைத்த இன்னொரு அற்புதமான திரைப்படம். மூளை வளர்ச்சி இல்லாத தந்தைக்கு செய்யாத குற்றத்திற்காக சிறைவாசம். வெளி வேஷம் இல்லாத வெகுளியான தந்தைக்கு தெரிந்த ஒரே விஷயம் மகளின் பாசம். ஆறு வயது சிறுமிக்கு அப்பா மேல் அளவு கடந்த அக்கறை. அப்பாவை எங்கே கொண்டு போகிறார்கள் என்று கண்ணீர் நிறைந்த அந்த பிஞ்சு கண்கள் பேசும் பொழுது நமது கண்களில் கண்ணீர் நிறைவது நிச்சயம்.

நான் இங்கே பகிர்ந்த திரைப்படங்களில் ஒரு பக்கம் நகைச்சுவை காட்சிகள் சத்தம் போட்டு சிரிக்க வைத்தது என்றால் மறுபக்கம் மனதை உருக்கும் தருணங்கள் மெளனமாக கண்ணீர் சிந்த வைத்து விடுகிறது. நம்பிக்கை, அன்பு, விடாமுயற்சி என்று நேர்மறை சிந்தனைகள் எடுத்து காட்டும் காட்சிகள் பார்வையாளர்கள் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்து விடும்.இன்னும் பிற மொழிகளாகிய ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று நான் ஒவ்வொரு திரைப்படமாக அடுக்கினால் கட்டுரைகள் பல எழுதலாம்.

--சிவசுப்பிரமணியன் 

திங்கள், 22 பிப்ரவரி, 2016

10 நொடி கதை 8 - சுயம்வரம்

2100 கி.பி பிரம்மாண்டமான மாளிகை முன் ஒரு நீண்ட வரிசையில் இளைஞர்கள் நின்று கொண்டிருந்தார்கள். மாளிகையின் வாசலில் ஒரு எந்திரன் ஒவ்வொரு இளைஞனையும் நிறம், இரத்த பிரிவு, எடை, உயரம், பழக்க வழக்கங்கள் என்று சோதனை செய்து கொண்டிருந்தது. மாளிகையின் உள்ளே மின்திரையில் 50% அறிவாளி, 20% புகை பிடிப்பவன், 30% மது அருந்துபவன் என்று புள்ளி விவரங்களை பார்வையிட்டாள் நல்ல மணமகனை எதிர்பார்க்கும் எந்திர பெண்.

--சிவசுப்பிரமணியன்

சனி, 20 பிப்ரவரி, 2016

10 நொடி கதை 7 - உடற்பயிற்ச்சி

“ஆரோக்கியமாக வாழ்வதற்கு நடப்பது, நீச்சலடிப்பது, படிக்கட்டில் ஏறி இறங்குவது என்ற எளிய உடற்பயிற்ச்சிகளை கடை பிடியுங்கள்.” 

அருமையான சொற்பொழிவை முடித்து விட்டு அந்த இளம் சுகாதார அமைச்சர் மின்தூக்கியை நோக்கி அன்ன நடை நடந்தார்.



-- சிவசுப்பிரமணியன்

சனி, 13 பிப்ரவரி, 2016

கட்டுரை 6 - மறந்து போன தேவதை கற்பனை கதைகள்

டந்த கட்டுரையில் மறந்து போன மாயாஜால கற்பனைக்கதைகள் பற்றி எழுதியிருந்தேன். இந்த கட்டுரையில் தேவதை கதைகள் (Fairy Tales), பறக்கும் நாகங்கள் (Dragons), வேதாளங்கள் அல்லது காட்டேரிகள் (Vampires), ஓநாய் மனிதர்கள் (Werewolves) மந்திரவாத குள்ளர்கள் (Dwarfs), மாயலோக கூளியர்கள் (Elves) என்று வியக்க வைக்கும் கற்பனை கதாபாத்திரங்கள் பற்றி பார்ப்போம்.

தமிழில் தேவதை கதைகள் அந்த காலத்தில் பல வடிவங்களில் இருந்திருக்கலாம். தேவதை கதைகளில் நல்ல தேவதைகள் ஆக தேவதூதர்கள், தெய்வங்கள், தேவர்கள், குறும்பு செய்யும் குட்டி தேவதைகள் ஒரு பக்கம் என்றால் கெட்ட தேவதைகள் என்று பேய், பிசாசு, சூனியம், விசித்திர குள்ளர்கள், பூதங்கள், அரக்கர்கள், அசுரர்கள் மறுப்பக்கம் என்று புராண கதைகளிலே படித்திருப்பீர்கள். ஆங்கில புனைக்கதைகளிலும் மாயாஜால திரைப்படங்களிலும் Elves, Dwarves, Dragons, Vampires, Werewolves, Angels, Unicorns, Centaurs , Mermaids, Ghosts, Demons, Devils, Goblins, Zombies, Witches, Trolls, Genies, Black magic, White magic, Giants, Gnomes, Pixies, Immortals, Sorcery என்று வகைகளோ ஏராளம்.

கிரேக்க புராணங்கள், சீன புராணங்கள், புத்த புராணங்கள் புரட்டி பார்த்தவர்களுக்கு இந்த கற்பனை கதாபாத்திரங்கள் பரிச்சயமானவை தான். Dragons என்ற வார்த்தையை தமிழில் மொழிபெயர்த்தால் வலு சர்ப்பம் அல்லது பறக்கும் நாகம் என்று தான் இணையத்தில் கிடைத்தன. ஆங்கில படத்தை தமிழில் பார்க்கும் உணர்வு தான். ஆனால் தமிழில் நேரடி கட்டுரைகளோ திரைப்படங்களோ மறந்து போன இந்த கற்பனை படைப்புகளை நாம் பார்த்ததும்,படித்ததும், கேட்டதும் அரிது.

அம்புலி, மிருதன், புலி என்ற தமிழ் திரைப்படங்களில் ஓநாய் மனிதன் (Werewolf), மிருதன் (Zombie), காட்டேரி (Vampire) கதைக்களமாக இருப்பதை கவனித்திருப்பீர்கள். ஆனால் ஆங்கில திரையுலகில் Vampire வகையில் Dracula, Twilight series, Van Helsing, Hotel Transylvania, Underworld என்று எண்ணிக்கையில் அடங்காத திரைப்படங்கள் சொல்லிவிடலாம். காட்டேரிகள் சாகாவரம் பெற்று மனித ரத்தம் சுவைக்கும் இனமாக காலம் காலமாக காட்டியிருப்பார்கள். ஓநாய் மனிதர்களை முழு நிலவில் மட்டும் ஓநாய், மற்ற நாட்களில் மனிதனாக சித்தரிப்பார்கள்.இப்படி ஒவ்வொரு தேவதை கதைகளும் அற்புதமான கற்பனை களஞ்சியம்.

Elves என்ற வார்த்தைக்கு தமிழில் அர்த்தம் என்ன என்று கூகுளை சொடுக்கிய போது கிடைத்த தமிழ் வார்த்தைகள் கூளி, தெய்வம். ஆனால் அது சரியான மொழிபெயர்ப்பு என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கூளி என்றால் ஆண் பேய், தெய்வம் என்றால் கடவுள் என்று தான் நேரடி அர்த்தங்கள். இந்த ஒரு கதாபாத்திரத்தை ஜெர்மானிய புராணங்களிலிருந்து எடுக்கப்பட்டதாக விக்கிபீடியா சொல்கிறது. Lord of the Rings, Eragon ஆகிய திரைப்படங்களை பார்த்தவர்களுக்கு Elves, Dragons  எப்படி இருப்பார்கள் என்பது தெரிந்திருக்கும். The Chronicles Of Narnia என்ற நாவலை படித்தவர்களோ அல்லது திரைப்படத்தை பார்த்தவர்களோ இந்த கட்டுரையில்  குறிப்பிட்ட பெரும்பாலான கற்பனை வடிவங்கள்  உலா வருவதை கவனித்திருப்பீர்கள்.

சமஸ்க்ருத புராணங்கள் மற்றும் தமிழ் புராணங்களில் கூட வியக்க வைக்கும் கதைகள் உள்ளன. அதை இன்னொரு கட்டுரையில் பார்க்கலாம்.

--சிவசுப்பிரமணியன்.