எனது நண்பன் விடுமுறைக்கு சொந்த ஊர் சென்று விட்டதால் அவன் தங்கும் அறையை என்னிடம் ஒப்படைத்து விட்டு சென்றான். புத்தகங்கள் அடுக்கி வைத்திருந்த இடத்திலிருந்து இரண்டு புத்தகங்களை எடுத்து புரட்டி கொண்டிருந்தேன். அப்பொழுது கதவு தட்டும் சத்தம் கேட்டது.
கதவை திறந்து பார்த்தால் அந்த வீட்டின் சொந்தக்காரரின் பதின் பருவத்து பையன் நின்று கொண்டிருந்தான். "நான் இங்கே கொஞ்சம் நேரம் ஒய்வு எடுக்க வந்தேன்", என்று சொல்கிறான். அவன் இங்கு தூங்கினால் எவ்வளவு நேரம் ஆகுமோ என்று தெரியாததால் என் நண்பனை அலைபேசியில் அழைக்கிறேன். "அவன் ஒரு திருட்டு பயல். அவனை அங்கு தங்க விடாதே", என்று நண்பன் எச்சரிக்கிறான்.
வீட்டுக்காரம்மாவை கூப்பிட்டு அவனை திருப்பி அழைத்து செல்லுங்கள் என்று நான் சொல்கிறேன். கதவை சாத்திவிட்டு மீண்டும் வந்து அமர்கிறேன். பத்து நிமிடங்கள் கடந்த பின் கதவு தட்டும் சத்தம் கேட்கிறது. இந்த முறை ஒரு கர்ப்பிணி பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவிச்சு வைத்த முட்டையின் வெள்ளை கரு கேட்கிறார்.
குழம்பி போய் நானும் குளிர் சாதன பெட்டியில் இருந்த முட்டைகளை எடுத்து நீங்களே அவிச்சு சாப்பிட்டுக்கோங்க என்று அனுப்பி வைக்கிறேன் அந்த பெண்மணியை. அரை மணி நேரம் சென்றிருக்கும். மீண்டும் கதவு தட்டும் சத்தம். இரு பாலகர்கள் நின்று கொண்டிருந்தனர். இரட்டை சகோதரர்கள் போல தெரிந்தார்கள். வீட்டை சுத்தம் செய்ய வந்தோம் என்று கூறுகின்றனர்.
வீட்டினுள் நுழைந்து பொருட்களை ஒதுங்க வைத்து துப்பரவு செய்த பின், தண்ணீர் விட்டு வீட்டை சுத்தம் செய்தனர். பிறகு அண்ணன் வந்தா சொல்லிருங்க என்று என்னிடம் சொல்லி விட்டு செல்கிறார்கள். சிறு வயதிலேயே இவர்களுக்கு இந்த வேலையா என்று நான் சிந்திக்கும் பொழுது சமையல் எரிவாயு கசிந்த வாடை வீசுகிறது. விளையாட்டு சிறுவர்கள் சுத்தம் செய்யும் நேரம் பார்த்து எரிவாயு உருளையின் குழாயை உடைத்து விட்டிருந்தனர். மீண்டும் கதவு தட்டும் சத்தம். கண் முழித்து பார்க்கிறேன் - அடடா கனவு தானா என்று பெருமூச்சு விடுகிறேன்.
--சிவசுப்பிரமணியன்