செவ்வாய், 30 ஏப்ரல், 2013

கனவு 12 - ஆவியின் மொழி

ஆவிகளோடு பேசும் பல முறைகளை நான் கேட்டதுண்டு, சில திரைப்படங்களில் பார்த்ததும் உண்டு. ஆனால் இந்த கனவில் நான் கண்டது மிகவும் புதுமையானது.

நான் ஒரு வீட்டு வாசலில் அமர்ந்திருக்கிறேன். வீட்டு முற்றம் தெள்ள தெளிவாக காட்சியளிக்கிறது. அங்கிருந்த கோலப்பொடி எடுத்து நான் ஏதோ எழுத முயற்சிக்கிறேன். "யார் ?" என்று கோலம் போடுகிறேன். மறுபுறத்தில் "உன் ஆச்சி" என்று பதில் வருகிறது. எனக்கோ திக்கென்றது. திடீர் என்று ஆவிகள் சூழ்ந்த உலகத்தில் அமர்ந்திருப்பது போல் உணருகிறேன்.

பிறகு கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து கொண்டு "நீங்கள் எந்த ஆச்சி ?" என்று கோலத்தால் கேட்கிறேன்.  சற்று தாமதமானாலும் பதில் வந்தது - "கனகம்மா".

நான் அசந்துபோய் அதிர்ச்சியில் சிலையானேன். ஏனென்றால் அந்த பெயர் எனது இறந்து போன ஒரு பாட்டியின் உண்மையான பெயர்.அடுத்து பல கேள்விகள் நான் கேட்பதற்குள் கனவு கலைந்து விட்டது .....

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

கனவு 11 - எகிப்து மம்மி

கனவுகள் சில நல்ல நினைவுகளாக மனதில் பதிந்து விடும். மற்று பல அச்சுறுத்தும் பயங்கரமாகவும் பயமுறுத்தவும் செய்து விடும்.  சிலருக்கு கனவில் கண்டது அடுத்த நாளோ, பிறகு எப்பவாவதோ அதன் படியே நடந்து விடும்.சிலருக்கு முன் எப்பொழுதோ நடந்த சம்பவம் ஆழ் மனதில் பதிந்து கனவுலகில் வந்து நிழல் காட்சி தரும். இது போல் நான் கண்ட ஒரு கனவு மூன்று வருடங்கள் முன் நடந்து முடிந்த என் தாத்தாவின் இறுதி அஞ்சலி யுடன் துவங்கியது.

நானும் எனது சொந்த பந்தங்களும் - எனது தாத்தா  இறந்த பிறகு, அவரது உடலை தகனம் செய்ய கடற்கரைக்கு எடுத்து செல்லும் காட்சி தெரிகிறது. அழுகையும் சோகமும் ஆங்காங்கே தெளிவாக காண முடிகிறது. தகன காரியம் முடிந்து கொண்டிருக்கும் நேரம் கடல் அலைகளின் பேரிரைச்சல் ஒலிக்கிறது. தூரத்தில் கடலின் மேல் மட்டத்தில் ஒரு சடலம் மிதந்து கரையோரம் வருகிறது....

திடீர் என்று எனது நண்பரின் காலை பற்றி இழுக்கிறது. நண்பர் அதை விடுவித்து கொண்டு மிரண்டு ஓடுகிறார். கொஞ்ச நேரத்தில் அந்த சடலம் எகிப்து மம்மி போல அங்கு கூடியிருந்த யாவரையும் துரத்துகிறது. நானும் எனது சகோதரர்களும் , மாமாக்களும் பயந்து ஓடுகின்றோம்.

அனால் விடாது கறுப்பு போல் அந்த சடலம் ஓடி வந்து என்னை உடும்பு பிடி பிடித்தது.நான் அலறியடித்து கீழே விழுகின்றேன். அதே சமயம் கடலின் அலைகளை கவனித்தால் பன்மடங்கு சடலங்கள் மிதந்து வருவது யாவரையும் மேலும் அச்சுறுத்தியது. என்னை வீழ்த்திய அந்த சடலம் என் மேல் அமர்ந்து கொண்டு எனக்கு புரியாத வேற்று கிரக மொழியில் பிதற்றியது.

அதன் செய்கையை வைத்து எனக்கு புரிந்தது  ஒரு விஷயம் -
நாம் தேடி வந்த உயிரினங்கள் இந்த கிரகத்தில் இல்லை என்பது போல் தலையசைத்து விட்டு மாயமாக காற்றில் மறைந்தது.  உடனே கடலில் மிதந்து வந்த மற்ற வேதாள சடலங்களும் எழுந்து வந்து கொண்டிருக்கும் போதே மறைந்தன. அதிர்ச்சியில் நான் கண்ட அந்த கனவும் மறைந்தது ........!!!!