வியாழன், 31 மே, 2012

மெகா கவிதை 25 - நாட்டு நடப்பு (பாகம் 4)

சமுதாயத்தின் நிலைமையை எப்பொழுதும் உணர்த்த
மாணவர்களுக்கு வேண்டும் தனி வகுப்பு;
அவதாரங்கள் பல ஆண்டவன் எடுத்தாலும் குறையாது
மனிதன் செய்யும் தவறுகளின் தொகுப்பு;
சொந்த உயிரைக்கூட பொருட்படுத்தாமல் தேசத்தை
காப்பாற்றும் ராணுவ வீரன் தருவது பாதுகாப்பு;
விலை உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் மக்கள் ஆசைப்பட்டு
வாங்கும் தங்கம் பளபளப்பு;
அன்னையின் முழு அன்பு கிடைத்தால் மட்டுமே சீராகும்
பிள்ளைகளின் வளர்ப்பு;
மகிழ்ச்சியுடன் கூடிய பேரானந்த துளிகள் கொண்டு
வாழ்க்கை பாத்திரத்தை நிரப்பு;
தீவிரவாதிகளை கண்டுபிடிப்பபதில் போலீஸ் முதல் சிபிஐ
அதிகாரிகள் வரை காட்டும் பரபரப்பு;
அவரவர் கடமையை ஒழுங்காக செய்தால் கொடிகட்டி
பறக்கும் நாட்டின் தலைப்பு;
கல்வியின் தீப ஒளியை ஏற்ற ஆண் பெண் இருவருக்கும்
சமமாக தேவை படிப்பு;
நட்பின் பாலம் இடிந்து விழாமல் இருக்க நண்பர்களுக்கு
வேண்டும் இறுக்கமான பிடிப்பு;
புடவைகள் பல தினுசுகளாக வந்தாலும் அழகு தருவது
மடிசார் மாமி மடிப்பு;
விருதுகள் பல கொடுத்தாலும் மக்கள் மனதில் நீங்காது
இடம் பிடிப்பதே பிரம்மாதமான நடிப்பு;

தொடரும்...

வியாழன், 24 மே, 2012

மெகா கவிதை 25 - நாட்டு நடப்பு (பாகம் 3)

ஒருவன் தனது வேலைகளை உடனடியாக செய்ய
உதவுவது உடலின் ஒவ்வொரு உறுப்பு;
வாக்குரிமை என்ற கடமை நாட்டின் எல்லா குடிமகனின்
மாபெரும் பொறுப்பு;
ஐந்தறிவு படைத்த நன்றியுள்ள மிருகங்களிடம் காட்ட
வேண்டாம் வெறுப்பு;
தேடி வந்து நல்ல நட்பு கிடைக்கும் போது சொல்ல
வேண்டாம் மறுப்பு;
தவமாய் தவமிருந்து கிடைத்த பலனிர்க்கு கடவுள்
கொடுத்த வரம் தான் பிறப்பு;
எப்படிப்பட்ட மனிதர்களாக இருந்தாலும் தடுக்க
முடியாத விஷயம் இறப்பு;
பாபம் தெரிந்தே செய்த பாவிகளுக்கு நரகத்தில் கூட
இல்லை மன்னிப்பு;
ஆபத்துகளில் சறுக்காமல் இருக்க தேவை தன்னம்பிக்கை
எனும் துடுப்பு;
நாட்டின் முன்னேற்ற பாதைக்கு இளைஞர்களுக்கு தேவை
வெறியுடன் கூடிய நெருப்பு;
பிரச்னை என்பது ஒவ்வொரு மனிதனுக்கு கிடைத்த
தங்கமான வாய்ப்பு;
அடிமை நாடு சுதந்திரம் வாங்கி வல்லரசாக மாறினால்
புருவம் உயரும் வியப்பு;
தொடரும் ...

திங்கள், 21 மே, 2012

மெகா கவிதை 25 - நாட்டு நடப்பு (பாகம் 2)


நாட்டின் சுதந்திரத்திற்க்கு பாடுபட்ட தியாகிகள் மடிந்தது
மிக பெரிய இழப்பு;
பேராசை உள்ள மனிதர்கள் லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும்
அதிகரித்து விட்ட கொழுப்பு;
தீவிரவாதம் இல்லாத நாடு கிடைக்க முதல் தேவை
வன்முறையின் அழிப்பு;
அகந்தை உள்ள மனிதர்கள் தானம் கொடுக்கும் பொழுது
கூடாது பழிப்பு;
விவசாயிகள் சிந்தும் வியர்வை துளியால் தன தானியம்
யாவும் செழிப்பு;
மாநிலத்தின் முதல் மாணவனாக பரீட்சையில் தேர்ச்சி
பெற்றால் பெற்றோர்களுக்கு பூரிப்பு;
குதூகலமாக நூறு வயது வரை வாழ வைக்கும்
மத்தாப்பு தான் சிரிப்பு;
ஒவ்வொரு மொழிகள் பேசும் போது வார்த்தைகளுக்கு தேவை
சரியான உச்சரிப்பு;
பணம் மட்டுமில்லாமல் நல்ல மனமும் இருந்தால் தான்
சமூகத்தில் மதிப்பு;
ஒழுக்கம் கற்றுக்கொள்ள தேவையானது சிகரம் தொட்ட
மனிதர்களின் சந்திப்பு;
எத்தனை நிறங்கள் வந்தாலும் மாறாமல் இருப்பது
வறுமையின் நிறம் சிவப்பு;
பத்து மாதம் சுமந்து பெற்ற அன்னையின்
கருவறை நிறம் கறுப்பு;
தொடரும்....

ஞாயிறு, 20 மே, 2012

மெகா கவிதை 25 - நாட்டு நடப்பு (பாகம் 1)

 உலகில் வாழும் உயிரினங்கள் யாவும் இறைவனின் படைப்பு;
சுறுசுறுப்புடன் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் உழைப்பு;
சவால் போட்டிகளில் ஜெயம் கிடைக்க தேவை துடிப்பு;
கிராமங்களில் இப்பொழுதும் மாறாமல் இருப்பது மண்வாசனையுடன் அடுப்பு;
நகரங்களில் எப்பொழுதும் மாறிக்கொண்டே இருக்கும் நாகரீக உடுப்பு;
அரசியல் தலைவர்களின் செல்வாக்கை பிரபலமாக்க அவர்களுக்கு எடுப்பு;
இன்பம் வரும் நேரத்தில் சந்தோஷத்தை வெளிபடுத்த கொடுப்பது இனிப்பு;
துன்பம் வரும் நேரத்தில் துக்கத்தை காட்டிக்கொள்ளாமல் உள்ளுக்குள் கசப்பு;
பணக்காரர்கள் தங்களது பிறந்த நாளை கூட கொண்டாடும் முறை சிறப்பு;
ஏழைகள் தங்களது வாழ் நாள் முழுவதும் கஷ்டப்பட்டு போராடுவதில் தவிப்பு;
உண்மை குற்றவாளிகளை விடுவித்து நிரபராதிகளை தண்டிப்பது தவறான தீர்ப்பு;
மதங்களும் ஜாதிகளும் இல்லாமல் இருக்க செய்யும் சக்தி ஒற்றுமை ஈர்ப்பு;
நோய்களை மட்டுமல்லாமல் எதிரிகளையும் விரட்ட வைக்கும் சக்தி எதிர்ப்பு;

தொடரும் ...

ஞாயிறு, 13 மே, 2012

கவிதை 24 -கல்லூரித்தோழன்

சிறு வேலையை கூட சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும்
செய்து முடிக்கும் நாணயமுள்ள நண்பனே;
உன் நகைச்சுவை சரவெடிகள் யாவும் யாவரையும்
சிரிக்க மட்டுமல்ல சிந்திக்க வைத்தன;
உன் திறமையான செயல்கள் எங்கேயும் எப்போதும்
சந்தோஷப்பட மட்டுமல்ல ஆச்சரியப்பட வைத்தன;

உன் உதவும் குணத்திற்கு பாராட்டு பதக்கம் கொடுக்கட்டுமா ?
உன் வேடிக்கை பேச்சுக்கு புலமை புகழாரம் சூடட்டுமா ?
முன் யோசனை தரும் உன் புத்திக்கு வெற்றிமாலை அணியட்டுமா ?

சோதனைகளை சாதனைகளாக மாற்றி நம் நட்புக்கு
முதல் மரியாதை கொடுக்கும் தோழா,
உன் தன்னம்பிக்கை உன் வாழ்வுக்கு மட்டுமல்ல
பிறர் வாழ்வுக்கும் கை கொடுக்கும் ...
உன் லட்சிய பயணத்தில் எப்பொழுதும்
சிரிப்பு என்ற பூ தளராமல் பூக்கட்டும் ....
நட்பு என்ற பூ மறவாமல் மலரட்டும் ...

நம் கல்லூரி நினைவுகள் உன்னை தாலாட்டும் போது
முதன் முதலில் ஞாபகம் வருவது நம் நட்பாக இருக்கட்டும் ...!

நட்பு வரமா தவமா?
சிவசுப்பிரமணியன்

சனி, 12 மே, 2012

கவிதை 23 - காவியக்காதல்


தாமரையை கையில் ஏந்தி , கண்ணீரை விழிகளில் சிந்தி,
காதலனுக்காக காத்திருந்தாள் அபூர்வ அழகி !
அம்புகளை வில்லால் ஏவி, எதிரிகள் கண்ணில் மண்ணை தூவி,
போர்க்களத்தில் வீரனாக திகழ்ந்தான் இளவரசனான காதலன் !
சூரியன் மறைந்து விடும் இன்னும் சில நிமிடங்களில் ....
தோல்வியைத்தழுவினர் எதிரிகள் நொடிகளில் ....
வெற்றியின் உச்சியை தொட்டு விட்டு,
காதலன் சிட்டாக பறந்தான் குதிரையில்;
பின்தொடர்ந்த எதிரி நாட்டு ஒற்றன் ஒருவன்,
குறிபார்த்தடித்தான் காதலன் முதுகில்;
முறைப்பெண்கள் பலர் இருக்க, காதலியை மட்டும் மணப்பதற்கு,
போர் தொடுக்க,வென்ற பின்னும் காதலனுக்கு
இந்த அகோர கதி ஏற்ப்பட்டதோ ....
அல்லது காதலர்களை பிரிக்க வில்லன்கள் பலர்
தீட்டிய சதி திட்டத்தால் காதலுக்குத்தான் களங்கம் நேரிட்டதோ ....
மலர் மாலையுடன் வருவான் என்று எதிர்பார்த்த காதலி
அதிர்ச்சியுடன் சிலையானாள் - இரத்த வெள்ளத்தில்
காதலனை கண்டபோது ......!
ஆனால் மங்கல வாத்தியம் முழங்கியது அகிலமெங்கும்
இரு ஆன்மாக்கள் ஒரு சேர கலந்து,
தெய்வீகக்காதலை மேம்படுத்தி,
புனிதக்காதலை சீராட்டி,
அமரக்காதலை நிலை நிறுத்தி,
சொர்க்கத்தை நோக்கி பயணம் தொடரும் போது .....!

வணக்கம்,
சிவசுப்பிரமணியன் ***

கவிதை 22 - கலியுக கிருஷ்ணா

புல்லாங்குழல் பிடித்து மூச்சுக்காற்றை ஸ்வரமாக வாசித்து
கோபியர் மனதை திருடும் ஆனந்தக்கண்ணா ***
வெண்ணைக்கு பதில் மண்ணைத்தின்று பூலோகத்தையே
தன் திருவாயில் மலரச்செய்த கோகுலக்கண்ணா ***
ஆலகால விஷம் நிறைந்த ஆதிசேஷனை தலையணையாக
கொண்டு ஆரவாரம் செய்யும் கோபாலக்கிருஷ்ணா ***
மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு துணையாக இருந்து
அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்த அவதாரக்கிருஷ்ணா ***
பாலிய நண்பனான ஏழை குசெலனக்கு எழில் மாளிகை
அமைத்து கொடுத்த கொஞ்சும் ரமணா ***
ஆபத்திலிருந்து ஒரு கிராமத்தை காப்பாற்ற மாபெரும் அசுர மலையை
குடையாக தன் சுண்டு விரலில் தாங்கிப்பிடித்த பாலக்கிருஷ்ணா ***
எதிரிகளை துவம்சம் செய்ய தன் கையில் சுழலும்
சுதர்ஷன சக்கரத்தை ஏவிவிடும் ஹரிமுரளி ***
ரோகினி நட்சத்திரத்தில் பிறந்து அண்ணன் பலராமனோடு
சேர்ந்து வளர்ந்து தாய்மாமன் கம்சனை அழித்த மாயக்கண்ணா ***
லீலைகள் பல தொடர்ந்து செய்தாலும் உன் பெருமைகளை
சொல்ல ஆயிரம் கோடி நாவுகள் வேண்டும் ஸ்ரீ கிருஷ்ணா ***
மனக்கண்ணால் ஆராதனை செய்யும் பக்தர்களுக்கு அருள் புரியும்
கருணை கொண்ட கருமை நிறக்கண்ணா ***

கோபியர் கொஞ்சும் ரமணா ,
கோபால கிருஷ்ணா,
எப்போதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம்
தர்மத்தை காக்கவும், தர்மத்தை நிலை நாட்டவும் வருவாய் கலியுக கிருஷ்ணா ******

ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா,
சிவசுப்பிரமணியன்

சனி, 5 மே, 2012

கவிதை 21 - சினிமா தோழன்

தோழா, நீ ஒரு உயர்ந்த மனிதன் என்றேன்,
உருவத்தில் அல்ல ,உள்ளத்தில் ...
தோழா, நீ ஒரு பண்புள்ள காவல்காரன் என்றேன்,
வீட்டுக்கு அல்ல , நாட்டுக்கு ...
தோழா, நீ ஒரு கடுமையான உழைப்பாளி என்றேன்,
சொல்லில் அல்ல , செயலில் ...
தோழா, நீ ஒரு சகலகலா வல்லவன் என்றேன்,
நடிப்பில் அல்ல , நிஜத்தில் ...
தோழா, நீ ஒரு மாண்புமிகு மாணவன் என்றேன்,
பள்ளியில் அல்ல , சமூகத்தில் ...
தோழா, நீ ஒரு காதல் மன்னன் என்றேன்,
அரண்மனையில் அல்ல , இதயத்தில் ...
தோழா, நீ ஒரு தில்லான தூளான இளைஞன் என்றேன்,
கோபத்தில் அல்ல, வீரத்தில் ...
தோழா, நீ ஒரு இரக்கமுள்ள பேரழகன் என்றேன்,
தோற்றத்தில் அல்ல, குணத்தில் ...
தோழா, நீ ஒரு அன்புள்ள எதிரி என்றேன்,
நல்லவனக்கு அல்ல, கெட்டவனுக்கு ...
தோழா, நீ ஒரு ஜீன்ஸ் போட்ட நாயகன் என்றேன்,
சினிமாவுக்கு அல்ல, மக்களுக்கு ...
தோழா, நீ ஒரு சூர்யவம்ச தலைமகன் என்றேன்,
கம்பீரதுக்காக அல்ல, நட்புக்காக ..


நண்பா,நீ ஒரு ஆணையிடும் ஜென்டில் மேன் என்றேன்,
அகம்பாவமான அல்ல, அமைதியான ...
நண்பா,நீ ஒரு கலக்கும் மகாநடிகன் என்றேன்,
நாடகத்தில் அல்ல, வாழ்க்கையில் ...
நண்பா,நீ ஒரு சொக்கதங்க கேப்டன் என்றேன்,
கப்பலுக்கு அல்ல, ராஜ்ஜியத்துக்கு ...
நண்பா,நீ ஒரு டூயட் பாடும் ராஜகுமாரன் என்றேன்,
வம்சத்தில் அல்ல, குரலில் ...
நண்பா,நீ ஒரு லவ்லி - லக்கி - பிஸ்தா என்றேன்,
மிரட்டுவதில் அல்ல, நேசிப்பதில் ...
நண்பா,நீ ஒரு பாசமுள்ள காதலன் என்றேன்,
காதலிக்கு அல்ல, ஏழைகளுக்கு ...
நண்பா,நீ ஒரு அசத்தல் இம்சை அரசன் என்றேன்,
அடிவாங்குவதில் அல்ல, சிரிக்க வைப்பதில் ...
நண்பா,நீ ஒரு சொல்லி அடிக்கும் காமெடி கிங் என்றேன்,
நக்கல் நகைச்சுவைக்காக அல்ல, சிக்கல் சிந்தனைக்கு ...
நண்பா,நீ ஒரு மயக்கும் மன்மதன் என்றேன்,
ரதி தேவிக்கல்ல,ரசனை மனதிற்கு ...
நண்பா,நீ ஒரு பொல்லாத சுள்ளான் என்றேன்,
எதிரிகளின் சுளுக்கெடுபதற்க்கு அல்ல, பெரிய வீட்டு மாப்பிள்ளை ஆனதற்கு !!!

இந்த கவிதையில் வரும் நடிகர்கள் யார் என்று கண்டு பிடியுங்கள் பார்ப்போம் ?

அன்புடன்,
சிவசுப்பிரமணியன்***